இந்திய அணியின் நிலை உலகின் எந்த அணிக்கும் ஏற்படலாம்: ஹர்பஜன் சிங்
அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடர் தோல்விகனை நினைத்து கவலைப்படத் தேவையில்லை. இது போன்ற நிலைமை எந்த அணிக்கும் ஏற்படலாம் என இந்திய சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 0-4 என மோசமான இழந்தது.
இதுகுறித்து ஹர்பஜன் சிங் கூறியதாவது: அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி மோசமாக இழந்தது வருத்தம் அளிக்கிறது. இதுகுறித்து அதிகம் கவலைப்படத் தேவையில்லை.
ஒரு சில தொடர்களில் இதுபோன்ற மோசமான சரிவை சந்திக்க வேண்டியிருக்கும். இத்தொடரில் இந்திய வீரர்களின் செயல்பாடு திருப்தியாக இல்லை என்பது உண்மை.
அதேவேளையில் விரைவில் இந்திய வீரர்கள் எழுச்சி பெறுவார்கள் என நம்புகிறேன். இந்திய அணி தோல்வியின் பிடியிலிருந்து மீண்டு விரைவில் வெற்றிப் பாதைக்கு திரும்பும் என எதிர்பார்க்கிறேன்.
காயத்தில் இருந்து மீண்ட நான் விரைவில் தேசிய அணியில் இடம் பிடிப்பேன் என நம்புகிறேன். சர்வதேச போட்டிகளில் விளையாட முழு உடற்தகுதியுடன் உள்ளேன். உள்ளூர் போட்டிகளில் எனது திறமையை நிரூபித்து மீண்டும் இந்திய அணிக்காக விளையாட காத்திருக்கிறேன் என்றார்.




